பசும்பொன் வருகை தரும் முதல்வருக்கு எதிரான விவசாயிகளின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக சமாதான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு அக்டோபர் 30ஆம் தேதி தமிழக முதல்வர்
மு க ஸ்டாலின் வருகை தருகிறார். அப்போது பார்த்திபனூரில் விவசாயிகள் சங்கம் சார்பில் முதல்வரின் வருகைக்கு எதிராக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. காவேரி, வைகை, கிருதுமால், குண்டாறு ஆகிய நதிகளை ஒன்றாக இணைக்க வேண்டும், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை முற்றிலும் தடை செய்ய வேண்டும், விவசாய நிலங்களை பாழ்ப்படுத்தும் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பசும்பொன் வருகை தரும் முதல்வரின் வருகைக்கு எதிராக விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

இதனையடுத்து பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் வருவாய் கோட்டாட்சியர் சரவணபெருமாள், டிஎஸ்பி சபரிநாதன், வனத்துறை, வேளாண்மை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முதல்வரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் கூறியதையடுத்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக விவசாயிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *