0 1 min 13 hrs

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன். தனது சிறு வயதிலேயே திரையுலகின் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து, “மாஸ்டர் மகேந்திரன்” என்று அழைக்கப்பட்டார். குழந்தை நட்சத்திரமாக இருந்து நாயகனாக உருவெடுத்த மகேந்திரன், கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

கொரோனா காலக்கட்டத்தில் நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தில் இளம் வயது வில்லன் கதாபாத்திரம் (பவானி) மகேந்திரனை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதன்பிறகு பல திரைப்படங்கள், இணையத் தொடர்கள் என கதையும், நல்ல கதாபாத்திரமும் போதும் என்ற வகையில், திரை பயணத்தை மாற்றியுள்ளார்.

இதுதவிர, சமீப காலங்களில் தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய அளவில் மற்ற மொழி திரைப்படங்களிலும் மகேந்திரன் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், மகேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் “நீலகண்டா” திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

நீலகண்டா திரைப்படத்தை M ஸ்ரீனிவாசுலு மற்றும் D வேணுகோபா் சார்பில் எல். எஸ். புரொடக்ஷன்ஸ் தயாரிக்க ராகேஷ் மாதவன் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு அனில் இனமடுகு நிர்வாக தயாரிப்பும், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை ஸ்ரவன் ஜி குமார் மேற்கொண்டுள்ளார். நீலகண்டா திரைப்படத்திற்கு மார்க் பிரசாந்த் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் மகேந்திரன், யாஷ்னா முத்துலுரி, நேஹா பதன், ஸ்னேஹுலால், ராம்கி, பப்ளு ப்ரித்விராஜ், சுபலேகா சுதாகர், பரத் ரெட்டி, சத்ய பிரகாஷ், சித்ரம் சீனு மற்றும் சிவகார்த்திக் தன்டா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் கர்மா மீது அதீத நம்பிக்கை கொண்ட சாதாரண தையல்காரனின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனை மற்றும் அவனது வாழ்க்கையை புரட்டி போடும் எதிரியை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை மையமாக கொண்ட அதிரடி ஆக்ஷன் ஜானரில் சொல்லும் கதையம்சம் கொண்டிருக்கிறது.

நடிகர் மகேந்திரனின் திரைப்படம் நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *